நேற்று மதுரையில் நடந்த தவெக கட்சியின் 02-வது மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது அங்கு பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசும் போது, முதல்வர் ஸ்டாலினை அங்கிள் எனக் குறிப்பிட்டு விமர்சித்தார். இதற்கு திமுகவினர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'த.வெ.க. மாநாட்டில் அதன் தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினை 'அங்கிள்' என்று அழைத்தது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் அற்ற வார்த்தை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு பதிலாக தரம் தாழ்ந்த முறையில் அவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது. நடிகர் என்ற நிலையில் இருந்து அவர் தலைவர் என்ற நிலைக்கு இன்னமும் உயரவில்லை என்பதையே அவருடைய உரை வெளிப்படுத்துகிறது.' என்று அறிக்கையில் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.