புதுடெல்லி :தேசிய தலைநகர் பகுதி (NCR) முழுவதும் உள்ள தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு மீது பல்வேறு பிராணி நேசிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். தெருநாய்களை திடீரென காப்பகங்களில் அடைத்துவிடுவது சரியல்ல, அவற்றின் உயிர் உரிமை பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உடனடி தீர்ப்பு வழங்காமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில் இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், முன்னதாக 2 நீதிபதிகள் வழங்கிய உத்தரவை நிறுத்தி வைக்கும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை (sterilization) செய்து, தடுப்பூசி செலுத்தி, மீண்டும் அவற்றை அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது.இந்த புதிய உத்தரவை, பிராணி நேசிகள் மிகுந்த வரவேற்புடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.