துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார்.பின்னர் தி.மு.க., கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு விருந்து வைத்து ‘ஆதரவு திரட்டுகிறார்.
துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
2 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டதையடுத்து அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று தங்களது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து எம்.பி.க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ‘இந்தியா' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டில் இருந்து தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார்.
இந்நிலையில் அவர் இன்றுகாலை சென்னை வரும் அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் காலை 10.30 மணியளவில் சந்தித்து பேசுகிறார். அப்போது தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடான சந்திப்புக்கு பின்னர் சுதர்சன் ரெட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளார்.
பின்னர் அவர், மாலை 6 மணியளவில் அந்த ஓட்டலில், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களான தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கும், எம்.பி.க்களுக்கும் விருந்து வைத்து, ஆதரவை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.