பீஹாரில் இவ்வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனாலும் தேர்தல் குறித்த இறுதிநிலை இன்னும் தேர்தல் ஆணையகம் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் பீஹாரின் அரசியல் காட்சிகள் அனைத்தும் தங்களின் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பீஹாரில் வாக்காளர் ஓட்டுரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் 'வாக்காளர் உரிமை யாத்திரையை' தொடங்கியுள்ளார். இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் பீஹார் செல்லவுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையால் பீஹாரில் என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஒரு வேளை பீஹார் வருகிறார் என்றால், அதனால் என்ன மாற்றம் இங்கு (பீஹார்) நிகழ்ந்துவிட போகிறது..? அவரின் வருகையால் பீஹார் முன்னேறிவிடுமா..? என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பீஹாரின் பிரச்னைகளுக்கு, பீஹாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று விமர்சித்துள்ளார்.
மேலும், பீஹாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும் என்றும், பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் என்ன ஆதாயம் கிடைத்துவிட போகிறது..? என்று ராகுல்காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையை விமர்சித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி காங்கிரசை குற்றம் சுமத்துகிறார். காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால், பீஹார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும்..? புலம் பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பாஜ, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர். தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் உத்திகளை வடிவமைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.