ஜம்மு காஷ்மீர் அரசு, அதிகாரப்பூர்வ தகவல்களை பாதுகாக்கும் நோக்கத்தில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பென் டிரைவ் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக பயன்பாட்டை தடை செய்துள்ளது.
இனிமேல் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்காக பென்டிரைவ் பயன்படுத்தக்கூடாது என்றும், தகவல்களை வாட்ஸ்அப்பில் பகிர்வதும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. பதிலாக, கிளவுட் அடிப்படையிலான GovDrive தளத்தை தரவுப் பரிமாற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது ஜம்மு காஷ்மீரின் மின் துறையை சேர்ந்த பல வலைத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், இந்தியா முழுவதும் மின் துறை சுமார் 2 லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும், அவை வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாகவும் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.