கோவில்பட்டி அருகே கருப்பூர் இனாம் அருணாசலபுரம் கிராமத்தில் சிவகாசி பாறைப்பட்டியை சேர்ந்த கண்ணபிரான் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை முழுவதும் சேதம் அடைந்து தரைமட்டமானது. வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து சிதறி ஓடி உயிர் தப்பினர். பட்டாசு ஆலையின் அருகே இயங்கி வந்த கோழிப்பண்ணை முற்றிலும் தீயில் கருகி சேதம் அடைந்தது.
இந்த தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணபிரானின் உறவினர் கந்தசாமி (57 வயது) என்பவர் தப்பி ஓடியபோது இரும்பு வேலிகளில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக மாசார்பட்டி மற்றும் எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.