திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கிராமத்தை அடுத்துள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார்-சௌமியா தம்பதியினர். இருவரும் வெவ்வேறு இடங்களில் வேலை செய்து வந்ததால், சௌமியா தனியாக வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சௌமியா கடந்த 21-ம்தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது சத்தரை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சௌமியாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த ஷாலை பிடித்து இழுத்து, தன்னுடன் வந்து தனிமையில் இருக்குமாறு அழைத்து தகாத முறையில் பேசியுள்ளார்.
மேலும் சௌமியாவின் கையை பிடித்து இழுத்து, தன்னுடன் இருசக்கர வாகனத்தில் வருமாறு கட்டாயப்படுத்திய நிலையில், சௌமியா அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றபோது, சௌமியாவின் செல்போனை பறித்து கொண்டு அருண் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த சௌமியா நடந்ததை தனது கணவர் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த ராஜ்குமார், அருணிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, அருண் மற்றும் அவரது நண்பர்கள் ராஜ்குமாரை அடித்து உதைத்து, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதை பார்த்து ஓடி வந்த அப்பகுதி மக்கள் காயமடைந்த ராஜ்குமாரை மீட்டு கடம்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து சௌமியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அருண் மற்றும் அவரது நண்பரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.