`விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது'- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
Vikatan September 02, 2025 12:48 AM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேரூராட்சியில் 22 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் வாழ வந்தான் கண்மாய் அருகில் 12 ஆழ்துளை கிணறுகள் மற்றும் பிராகுடி ஆற்றுப் பாதையில் 12 ஆழ்துளை கிணறு என 24 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் தினசரி 14 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுப்பதற்காக ரூ. 3.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 30 கிலோமீட்டர் தூரத்திற்கு, 229 மின் கம்பங்கள் மற்றும் 13 மின் மாற்றிகள் மூலம் தனி மின்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 23 மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டிகளுக்கு 24 மணி நேரமும் 11 கேவி திறன் கொண்ட மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

வருவாய்த்துறை அமைச்சர்

சேத்தூர் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மும்முனை மின்சாரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்திக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு? “விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது. இதை நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் உறுதி செய்து உள்ளார்” என தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.