பீஹார் காங்கிரஸ் நேற்று ஏஐ உதவியுடன் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பிரதமரின் தாயாரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக பாஜ குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் அக்கட்சி அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளது.
குறித்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜவின் செஷாத் பூனவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் விவாதங்கள் தரம் குறைந்ததற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்றும், பிரதமரின் தாயாரை அவமதித்ததற்கு வருத்தப்படுவதற்கு பதிலாக, காங்கிரஸ் அதனை நியாயப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்டவரை பொய் கூறி பாதுகாத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பீஹார் காங்கிரஸ் தற்போது ஒரு அருவருப்பான வீடியோ உடன் அனைத்து வரம்புகளையும் மீறவிட்டது என்றும், அக்கட்சியின் துஷ்பிரயோகத்தையே இது காட்டுகிறதாகவும், பெண்களை அவமானப்படுத்துவது என்பது அக்கட்சியின் அடையாளமாக மாறிவிட்டதாகவும், நம்முடன் இல்லாதவர் பற்றி வீடியோ வெளியிட்டதற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டது. முதலில் காங்கிரஸ் மேடையில் இருந்து பிரதமரின் தாயாரை அவமதித்தனர். தற்போது வீடியோ மூலம் மீண்டும் அவமதிக்கின்றனர். இதனால், பீஹார் மக்கள் கோபத்தில் உள்ளனர். இதற்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். என்று பூனவாலா அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
இதனையடுத்து, பாஜவின் அர்விந்த் குமார் சிங்குறிப்பிடுகையில், பிரதமரின் தாயார் குறித்து ஏஐ மூலம் காங்கிரஸ் வீடியோ வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது. கோடிக்கணக்கான தாயார்களின் உணர்வுகளை அக்கட்சி புண்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், நமது நாட்டில் தாய்மார்களை கடவுள் துர்கை, லட்சுமி, சரஸ்வதியாக போற்றி வருகிறோம். காங்கிரஸ் தலைவர்கள் இதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இவரை தொடர்ந்து, காங்கிரசின் பவன் கேரா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:இந்த வீடியோவில் பிரதமரின் தாயாரை எந்த இடத்தில் அவமதிக்கும் வகையில் காட்சி உள்ளது என்றும், ஏதாவது ஒரு வார்த்தை, ஒரு குறியீட்டை காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தங்களது குழந்தைக்கு பாடம் சொல்லித் தர வேண்டியது பெற்றோரின் கடமை. அவர், தனது குழந்தைக்கு பாடம் தான் எடுக்கிறார்.
ஒரு குழந்தை, இதனை அவமரியாதை எடுத்தால், அது தலைவலி. எங்களுக்கு அல்ல உங்களுக்கு என்று குறிப்பிட்டுள்ளார். பாஜ ஒவ்வொரு விஷயத்தையும் அரசியல் ஆக்கி போலியாக கருணையை உருவாக்க வேண்டியது ஏன் என்றும், பிரதமர் அரசியலில் உள்ளார். அனைத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டும் எனவும், எதிர்க்கட்சிகளின் நகைச்சுவையையும் ஏற்க வேண்டும் என்றும், தற்போது நகைச்சுவை இல்லை. இது எங்களின் அறிவுரை என்று கூடியுள்ளார்.