லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகளை நீக்கக்கோரி மனு.!
Top Tamil News September 13, 2025 03:48 PM
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை, 'டார்க்' ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த ஆவணப்படம், கடந்த ஆண்டு நவம் பரில், நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி. , தளத்தில் வெளியானது.

இந்த படத்தில், அனுமதி பெறாமல், சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டி, படத்தின் பதிப்புரிமை பெற்ற, ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மனுவில் கூறப் பட்டதாவது:

ஆவணப்படத்தில், சந்திரமுகி படத்தின் காட்சிகளை நீக்கவும், இழப்பீடாக, 5 கோடி ரூபாய் கோரியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இன்னும் காட்சிகள் நீக்கப்படவில்லை.

எனவே, ஆவணப் படத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும். ஆவண படத்தின் வாயிலாக ஈட்டிய, லாப கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பிரச்னை தொடர்பாக, பேச்சு நடந்து வருவதாக, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

மனுதாரர் தரப்பில், 'பேச்சு நடந்து வருவதாக, இதுவரை எந்த தகவலும் இல்லை. வழக்கில், இன்னும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய, டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு, அக்., 6 வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.