உத்தரப்பிரதேசம் சோன்பத்ரா மாவட்டம் ராபர்ட்ஸ்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள லோதி சுரங்கத் தடையில் கடந்த வெள்ளிக்கிழமை (செப். 12) இரவு நடைபெற்ற கனிமச் சோதனையின் போது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. முறையான அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல லாரிகள், சோதனைக்குழுவை தவிர்க்க வேகமாக வாகனங்களை ஓட்டின. ஆய்வுக் குழுவினரை நசுக்க முயன்றதாகவும், தடுப்பு முயற்சிகளை வலுக்கட்டாயமாக மீறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனிமத் துறை சர்வேயர் யோகேஷ் சுக்லா மற்றும் போலீசார் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டபோது, அவர்கள் பாதுகாப்புக்காக ஓட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இதையடுத்து, வாகனங்களை நிறுத்த போலீசார் லாரிகள் மீது கற்கள் வீசியது குறித்து வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவலாக பரவி, விவாதத்துக்கு இடமளித்தன. இது தொடர்பாக போலீசார், அரசு கடமையில் தலையீடு, சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் லாரி ஓட்டுநர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், லாரிகளைப் பிடிக்கும் முயற்சிகள் தொடருகின்றன என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து, சோன்பத்ரா காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் மீனா விசாரணை உத்தரவு வழங்கினார். நகர வட்ட அதிகாரி ரந்தீர் மிஸ்ரா, “கல் வீச்சு ஒரு பொருத்தமற்ற நடவடிக்கை; ஆனால் போலீசார் தங்களை பாதுகாக்கவே அந்த வழியைத் தேர்ந்தெடுத்தனர்” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் கலவையான கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. சிலர் போலீசாரின் நடவடிக்கையை அவசியமான பாதுகாப்பு நடவடிக்கையாக கருப்பதாகவும், சிலர் அதனை நியாயமற்ற செயலாகக் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம், சட்டவிரோத சுரங்கச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும், அரசு அதிகாரிகளைத் தாக்க முயன்றவர்களுக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.