தயவு செய்து நெஞ்சுக்கு நீதி நூலை படிங்க : விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அட்வைஸ்!
Top Tamil News September 17, 2025 12:48 AM

மதுரை அண்ணாநகரில் பாஜக பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். திண்டுக்கல்லில் 21ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட பாஜக பூத் கமிட்டி மாநாடு நடக்கவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மாநாட்டில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மக்கள் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளனர். தேர்தல் வருவதால் முதல்வர் ஸ்டாலின் இன்னும் நிறைய வரிகளை குறைப்பார் என நம்பலாம். மின்சார வரி, சொத்து வரி குறைய வாய்ப்புள்ளது.

ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு மட்டும் நிர்ணயம் செய்வதில்லை. மாநில நிதி அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு. ஆனால், மத்திய அரசு மட்டுமே ஜிஎஸ்டி வரியை நிர்ணயம் செய்வதாக மக்கள் நினைக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி குறைப்பால் பல பொருட்களின் விலை குறையும். இதை வியாபாரிகளும், மக்களும் வரவேற்பார்கள். தீபாவளிக்கு நிதியமைச்சரும், பிரதமர் மோடியும் ஜிஎஸ்டி வரி குறைப்பை பரிசாக கொடுத்துள்ளனர். ஆனால் தமிழக அரசுக்கு இதில் விருப்பம் இல்லை. "வேண்டாத மனைவி கைப்பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்" என்பது போல மத்திய அரசு எதை செய்தாலும் குறை கூறுகிறார்கள். முதல்வருக்கு பாராட்ட மனமில்லை.

டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார். எல்லோரும் கூட்டணியில் இருந்தால் நல்லது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். தினகரன் கூட்டணியில் இருந்தபோது அமித்ஷா யாரை முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறாரோ, அவருக்கு பிரச்சாரம் செய்வோம் என்றார். இப்போது வேறு மாதிரி பேசுகிறார்.

2026 தேர்தல் பாஜகவுக்கு இலக்கு இல்லை என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 2026-ல் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். 2029-ல் NDA கூட்டணி அதிகமான எம்பிக்களை பெற வேண்டும்.

அதிமுக எதற்கெடுத்தாலும் டெல்லிக்கு செல்கிறார்கள் என்ற விமர்சனத்திற்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார். அமித்ஷா டெல்லியில் இருந்து இங்கே வந்து கூட்டணி உறுதி செய்தார். அதைப்பற்றி யாரும் பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் சோனியா காந்தியை சந்தித்ததை பற்றி பேசுவார்களா? அதிமுகவில் ஜனநாயகம் இருக்கிறது. அதனால் எல்லோரும் சென்று சந்திக்கிறார்கள். திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என வாரிசு அரசியல் தான் உள்ளது. பாஜகவில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது.

தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால், எதுவும் செய்யவில்லை. ஸ்டாலின் திட்டம் கொண்டு வந்து அதிகாரிகளை வேலை வாங்குகிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விட்டு திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். இதனால் அதிகாரிகள் மன வருத்தத்தில் இருக்கிறார்கள். தலைமைச் செயலாளர் கூட அனைத்து ஊழியர்களையும் பணிக்கு வர சொல்லி அறிவிப்பு வெளியிடுகிறார். இதுதான் தற்போதைய நிலைமை.

விஜய்யின் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த விமர்சனத்திற்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார். "ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன நன்மைகள் உள்ளது என விஜய் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார். ஐந்து வருடத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களால் அரசு பணம் செலவாகிறது. அதை குறைக்க தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும். "முன்னாள் முதல்வர் கலைஞர் கூட நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று எழுதியுள்ளார். இதையெல்லாம் விஜய்யை படித்து பார்க்கச் சொல்லுங்கள்" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

அன்புகரங்கள் திட்டம் குறித்து நயினார் நாகேந்திரன் குறை கூறினார். திமுக அரசு திட்டங்களை தொடங்குகிறார்களே தவிர, தொடர்ந்து நடத்துவதில்லை என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.