பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, தெரணி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வத்தின் மகன் நீலகண்டன், டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கவிதா (23) என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு, 1¾ வருடத்திற்கு முன்பு பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த நீலகண்டனின் முதுகுத்தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாலும், உடல்நிலை மோசமடைந்து கடும் வேதனையில் இருந்தார். கடந்த ஆண்டுக் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, மனைவி தேவாலயத்திற்குச் சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த நீலகண்டன் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அப்போது கர்ப்பமாக இருந்த கவிதாவுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 6 மாதக் குழந்தையை அழைத்துக் கொண்டு, தனது அண்ணன் கலியபெருமாள் வீட்டில் வசித்து வந்த கவிதா, கணவரை இழந்த துக்கத்தில் மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை, கணவர் உயிரை முடித்த அதே வீட்டிற்கு குழந்தையுடன் சென்ற கவிதா, தற்கொலை செய்த அறைக்குச் சென்று, தன்னையும், தன்னுடைய குழந்தையையும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அதில் இருவரும் தீயில் கருகிய நிலையில் அலறியதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
ஆனால், பலத்த தீக்காயங்களால் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தையை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தையும் உயிரிழந்தது. இந்த துயரமான சம்பவம் திருவெண்ணை ஆரப்பட்டியை உலுக்கிய நிலையில், பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.