அதிமுகவை எடப்பாடி அபகரித்தார். இப்போது எடப்பாடியை பாஜக அபகரித்து விட்டது என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
நமது எம்ஜிஆர் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளருமான மருது அழகுராஜ், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வில் இணைந்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அதிமுகவை எடப்பாடி அபகரித்தார். இப்போது எடப்பாடியை பாஜக அபகரித்து விட்டது. ஒரு அபகரிப்பு இன்னொரு பெரிய அபகரிப்பாக மாறிவிட்டது. இனியும் என் உழைப்பையும் ஆயுளையும் கரைத்துக் கொண்டு வீணாக்க விரும்பாமல் அதிமுகவை பெற்றெடுத்த இயக்கமான திமுக தாய் இயக்கத்தின் தாயுமானவராக இருந்து தமிழகத்தையும் திராவிடத்தையும் வழிநடத்தக்கூடிய முதல்வர் முன்னிலையில் அவருடைய தலைமை ஏற்று இன்று இணைந்துள்ளேன்.
என்னுடைய எஞ்சிய காலத்தை இறைவன் தருகின்ற ஆயுள் காலத்தை திராவிடத்திற்கும் திமுகவிற்கும் தமிழுக்கும் முதல்வரோடு இணைந்து உழைக்க நான் உறுதி கொண்டுள்ளேன். எடப்பாடி பழனிசாமியின் புண்ணியத்தில் திராவிட இயக்கம் ஒன்றாக கூடிய காலம் உருவாக்கி வருகிறது. அன்வர்ராஜா, நான் இன்னும் பலர் வருவதற்கு காத்துக் கொண்டுள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி ஆசீ கொடுத்து அனுப்பி வைப்பார். திமுகவை பலப்படுத்த எடப்பாடியும் துணை இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட இயக்கம் ஒன்றாக வேண்டும் என்ற ஆசை கூட இருக்கலாம். பல காலம் அதிமுகவில் இருந்த என்னை போன்றவர்களை அவர் நல்ல மனதுடன் இங்கு அனுப்பி வைத்துள்ளார் என்று தான் நினைக்கிறேன். தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவதற்கு எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை. இரண்டாம் இடத்தை விஜய் பிடிக்க முயற்சிப்பார். விஜயை பாராட்டினால் ஒரு எச்சரிக்கை உணர்வு எடப்பாடி பழனிசாமிக்கு வரும் என்றுதான் அவரை பாராட்டினேன்” என்றார்.