ஆந்திரா மாநிலம் மெதக் மாவட்டம் கொள்சாரம் மண்டலத்தில் உள்ள அப்பாஜி பள்ளி என்ற சிறிய கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிராமத்துக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில், ஒரு பெண் நிர்வாண நிலையில், காயங்களுடன் வலியால் முணுங்கி கிடந்ததை பொதுமக்கள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பெண்ணை மீட்டு மெதக் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து அந்த பெண்ணின் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர், அவரது உடல் நிலை மோசமாக உள்ளதை உணர்ந்த மருத்துவர்கள், அவசரமாக அவரை ஐதராபாத் காந்தி மருத்துவமனைக்கு மாற்றினர். ஆனால் அங்கு மேற்கொண்ட தீவிர சிகிச்சை பலனின்றி, அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் பழங்குடியின பெண் என்பதும், கூலி வேலைக்காக கடந்த வெள்ளிக்கிழமை அப்பாஜி பள்ளி கிராமத்திற்கு வந்திருந்ததும் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் சிலர் நம்பிக்கை அளித்து அவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
அங்கு அவரது சேலையால் மரத்தில் கட்டி வைத்து, நிர்வாணப்படுத்தி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அதனால் பலத்த காயங்களுடன் உணவின்றி, துணி இன்றி உயிருக்காக போராடிய அந்த பெண், மறுநாள் காலை மக்கள் கண்டபின் மட்டுமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் வருத்தமும், கோபமும் எழுந்த நிலையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.