``பிரிய முடியாது'' - காதல், நட்புக்காக தோழிகள் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்
Vikatan October 21, 2025 10:48 PM

இப்போதெல்லாம் நெருங்கிய இரண்டு நண்பர்கள் அல்லது தோழிகள் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க மனமில்லாமல் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நீண்ட நாள்களாக பழகிய இரண்டு தோழிகளை பிரிய மனமில்லாமல் அவர்கள் இரண்டு பேரையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு மனைவி தன் கணவனுக்காக எதையும் தாங்கிக் கொள்வார். ஆனால், அவனை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ள மாட்டார் என்பது இந்திய சமூகத்தில் பொதுவாகக் காணப்படும் ஒரு நடைமுறை. ஆனால் வாசிம், ஷிஃபா மற்றும் ஜன்னத் ஆகியோர் பாரம்பரியத்தை விட நம்பிக்கை, புரிதல் மற்றும் நீண்டகால நட்பின் அடிப்படையில் வெளிப்படையாக புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

Love

அங்குள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் இருக்கும் ஹோராபேட் என்ற இடத்தை சேர்ந்த வாசிம் ஷேக்(25) என்ற வாலிபர் தான் இக்காரியத்தை செய்து இருக்கிறார். இவருக்கு நீண்ட நாட்களாக ஷிஃபா ஷேக் மற்றும் ஜன்னத் ஆகிய இரண்டு பேரும் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் இருவர் மீதும் வாசிம் காதல் வயப்பட்டார்.

இரண்டு பெண்களும் வாசிம் மீது காதல் வயப்பட்டனர். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டனர். மூவரும் தங்களுக்குள் காதல் உணர்வு இருப்பதை பகிர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் திருமணம் குறித்து மூவரும் பேசினர்.

அப்போது உன்னை பிரிய முடியாது என்று இரண்டு தோழிகளும் தெரிவித்தனர். இதையடுத்து இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள தயார் என்று வாசிம் தெரிவித்தார். இதை இரண்டு தோழிகளும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். தோழிகள் இரண்டு பேரும் இது குறித்து தங்களது பெற்றோரிடம் பேசினர். பெற்றோர் ஆரம்பத்தில் எதிர்த்தனர்.

ஆனால் இரண்டு பேரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் அவர்களது திருமணத்திற்கு இரண்டு பேர் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து எம்.கே.பேலஸ் திருமண மண்டத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு மணமகள்கள், ஒரு மணமகன் என மூன்று பேரும் திருமணத்திற்கு மாலையுடன் வந்தனர்.

தோழிகள் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்

மணப்பெண்கள் இரண்டு பேரையும் இரண்டு கைகளில் பிடித்தபடி வாசிம் திருமண சடங்குகளில் பங்கேற்றார். இதில் இரண்டு பெண்களின் குடும்பத்தினரும் மனப்பூர்வமாக உறவினர்களுடன் கலந்து கொண்டனர்.

திருமணம் பாரம்பரிய முறைப்படியும், நவீன முறையிலும் நடந்தது. ஷிஃபா மற்றும் ஜன்னத் இருவருடன் வாசிம் சபதம் எடுத்துக் கொண்டார்.

ஒவ்வொருவருக்கும் சமமான மரியாதை மற்றும் அர்ப்பணிப்பை கொடுப்பதாக உறுதியளித்தார், அதே நேரத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில் சடங்குகள் செய்யப்பட்டன.

தங்கள் புதிய வாழ்க்கை சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதலில் அச்சாணியாக இருக்கும் என்று தம்பதியினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

வாசிம் இரு மணப்பெண்களின் கைகளைப் பிடித்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

நெட்டிசன்களில் சிலர் அவர்களின் அன்பு மற்றும் நட்பை பாராட்டியுள்ளனர். வேறு சிலர் அவர்களின் திருமணத்தை சமூகம் ஏற்றுக்கொள்வது குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.

``என் மனைவி கடவுள் கொடுத்த கிஃப்ட்!'' - நடிகராக அறிமுகமாகும் `ஜேசுரதி' மகன் பிரகன் பேட்டி
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.