`கடவுளுக்கே விமர்சனம் இருக்கும்போது, திரைப்படத்திற்கு விமர்சனம் இல்லாமல் இருக்காது' -அமீர்
Vikatan October 24, 2025 10:48 AM

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.

இந்நிலையில் 'பைசன்' குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமீர், " கருத்து உடன்பாடு உள்ளதால்தான் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தேன்.

பைசன்

சாதிய, மத மோதல்கள் நீங்க வேண்டும், மனிதர்களை சக மனிதர்கள் நேசிக்க வேண்டும், கடவுள் இருக்கிறது அல்லது இல்லை என்கிற மாபெரும் விவாதங்களை கடந்து அனைத்து மனிதர்களும் ஒரு தாய் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள், எல்லோரும் சமம் என்கிற கருத்தை பின்பற்றுகிறவன் நான்.

அப்படியிருக்கும்போது இந்த கருத்தியலை ஒன்றி யார் திரைப்படங்களைக் கெடுக்கிறார்களோ அவர்களோடு இருப்பது என்னுடைய கடமை என்று நான் நினைக்கிறேன்.

எனவே இந்த திரைப்பட கதையுடன் நான் ஒத்துப் போகிறேன். நீங்கள் கேட்பதைப் போல திரைப்படத்திற்கு சின்ன சின்ன விமர்சனங்கள் வரலாம்.

கடவுளுக்கே விமர்சனம் இருக்கிறது. இருக்காரா? இல்லையா? என்கிற கேள்வி இருக்கிறது. இருந்தால் நேரில் வர சொல் என்று சொல்லப்படுகிறது.

இப்பேற்பட்ட பிரபஞ்சத்தையே உருவாக்கிய கடவுளுக்கு விமர்சனம் இருக்கும்போது திரைப்படத்திற்கு விமர்சனங்கள் இல்லாமல் இருக்காது.

இயக்குநர் அமீர்

எனவே அதைக் கடந்து செல்லவேண்டும். திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் அதிகமாக இருக்கிறதா வரவேற்பு அதிகமாக இருக்கிறதா? என்பதைதான் நாம் பார்க்க வேண்டும்.

திரையரங்குகளில் படம் பார்க்கும் 500 பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களா? கிடையாது. ஆனால் திரைக்கதையின் கருத்தில் அவர்கள் ஒன்றிப்போய் இருக்கிறார்கள். அப்படித்தான் திரைப்படங்களை புரிந்துகொள்ள வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.