இளம்பெண் மீது அசிட் வீச்சு... டெல்லியில் ஒருதலை காதலால் கொடூரம்!
Seithipunal Tamil October 27, 2025 07:48 PM

டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் இளம்பெண் மீது அமிலத் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு வசிக்கும் 20 வயது இளம்பெண், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை, கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் கலந்துகொள்ள அவர் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது, சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்கள் அவரது வழியை மறித்தனர். இதையடுத்து மாணவி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து விலக முயன்றார். ஆனால், திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவர் மறைத்து வைத்திருந்த திராவகத்தை அவரது முகத்துக்கு வீசினார்.

அந்த தாக்குதலை தவிர்க்க முயன்ற மாணவி தனது கைகளால் முகத்தை மறைத்ததால், கைகள் தீவிரமாக எரிந்து காயம் ஏற்பட்டது. வலியில் அலறிய அவர் சாலையில் சரிந்தார். இதற்கிடையில் தாக்குதலாளிகள் வேகமாக தப்பி சென்றனர்.

அருகில் இருந்தவர்கள் உடனே காயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில், அமிலத் தாக்குதலை நடத்தியது அதே கல்லூரியில் படிக்கும் ஜிதேந்தர் என்ற இளைஞர் என தெரியவந்தது. அவர் கடந்த ஏழு மாதங்களாக மாணவியிடம் ஒருதலைக் காதலில் இருந்ததாகவும், மாணவி அதை மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்தியதாகவும் விசாரணையில் வெளிச்சமிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜிதேந்தருடன் சேர்ந்து செயல்பட்ட அர்மான் மற்றும் இஷான் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மூவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.