தலைநகர் டில்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்படுவதை எந்த மதமும் நியாயப்படுத்தாது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது. ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் வசிப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒரு சிலர் தான், அமைதியையும், சகோதரத்துவத்தையும் கெடுக்கின்றனர்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காஷ்மீரில் இருக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களும் பயங்கரவாதிகள் என்ற ஒரே பார்வையில் பார்த்தால், மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் அப்பாவி மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இதற்கு முன்பு நாம் பல்கலை பேராசிரியர்களைப் பார்த்தது இல்லையா..? படித்தவர்கள் பயங்கரவாத விஷயங்களில் ஈடுபடுவதில்லை என்று யார் கூறுகிறார்கள்..? அவர்களும் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நடக்கும் விசாரணை என்பது அதிர்ச்சியாக உள்ளது என்றும், ஏன் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை என்றும், நிலைமையை அமைதியாக வைத்திருக்க மத்திய அரசுக்கு மட்டும் நாங்கள் உதவ முடியும். அதனை நாங்கள் செய்கிறோம் என்றும் ஜம்மு காஸ்மீர் மாநில முதல்வர் கூறியுள்ளார்.
கடந்த சில நாளில் ஹரியானாவில் பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் காஷ்மீரை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தொடர்புடையவனாக டில்லி செங்கோட்டையில் காரை வெடிக்கச் செய்த டாக்டர் உமர் நபியும் காஷ்மீரை சேர்ந்தவன். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகின்றது.