செம ஈகோ!.. இப்ப அவர் பழைய சுந்தர்.சி இல்ல!.. இல்லனா ரஜினி - கமலுக்கே விபூதி அடிப்பாரா?!..
CineReporters Tamil November 16, 2025 07:48 PM

தமிழ் சினிமாவில் ஜாலியான காமெடி திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. சுந்தர்.சி-யை பொருத்தவரை ‘என் படம் பார்க்க வரும் ரசிகர்கள் இரண்டே கால் மணி நேரம் ஜாலியாக சிரித்து விட்டு போக வேண்டும். அவர்களுக்கு நான் கருத்தை சொல்லி கடுப்படிக்க கூடாது’ என சொன்னவர் இவர்.

சுந்தர்.சி இயக்கும் படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும். சுந்தர்.சி இயக்கிய வின்னர், கிரி போன்ற படங்களில் வடிவேலு செய்த காமெடிதான் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்திலிருந்து சுந்தர்.சி விலகி இருக்கிறார். சுந்தர்.சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததால் அவர் இந்த முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் முக்கிய விஷயம் என்னவெனில் சுந்தர்.சி அந்த முடிவை எடுத்தது ரஜினிக்கும், கமலுக்குமே தெரியாது. தயாரிப்பு நிறுவனத்திடமும், ரஜினியிடமும் முறையாக சொல்லாமல் சமூக வலைதளங்கள் மூலம் சுந்தர்.சி அறிக்கை வெளியிட்டது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஒரு படத்திலிருந்து விலகுவதாக இருந்தால் அவர் தயாரிப்பு நிறுவனத்திடம் முறையாக தெரிவித்துவிட்டு விலகியிருக்க வேண்டும். இப்படி எதுவுமே சொல்லாமல் விலகுவது தவறு’ என சினிமாவில் அனுபவம் உள்ளவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் இதுவரை சுந்தர்.சி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

சுந்தர்.சி மிகவும் ஜாலியான மனிதர். படப்பிடிப்பில் எல்லோரிடமும் மிகவும் ஜாலியாக பேசுவார். எப்படிப்பட்ட முரண்டு பிடிக்கும் நடிகராக இருந்தாலும் கூலாக பேசி வேலை வாங்கி விடுவார். ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக போகாத கார்த்திக்கை வைத்து கூட திரைப்படங்களை இயக்கினார். இதை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஆனால் படத்திலிருந்து விலகியதை அவர் கமலிடமும் ரஜினியிடம் சொல்லாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது பார்க்கும்போது சுந்தர்.சி இப்போது மாறிவிட்டார் என்பதையே காட்டுகிறது. இப்போது அவர் பழைய சுந்தர்.சி இல்லை. அவருக்குள் நிறைய ஈகோ வந்துவிட்டது’  என சினிமா உலகில் பேசி வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.