மாமல்லபுரத்தில் நாளை இலவச அனுமதி
Top Tamil News November 19, 2025 11:48 AM

மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களை நாளை (19ம் தேதி) சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், தொல்லியல்துறையின் பராமரிப்பில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை உலகுக்கு பறைசாற்றும் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜூனன்தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட குடவரை சிற்பங்கள் அமைந்துள்ளன. இவற்றை, தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. மேலும், இங்குள்ள சிற்பங்களை அருகில் சென்று கண்டு ரசிக்க உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40 மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு ரூ.600 கட்டணமாக தொல்லியல்துறை வசூலித்து வருகிறது. இந்நிலையில், நவம்பர் மாதம் 19ம் முதல் 25ம் வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுவதால், பாரம்பரிய வாரத்தின் முதல்நாளான (19)ம் தேதி புதன்கிழமையான நாளை மேற்கண்ட கலைச்சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என  தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.