பீகார் முதல்வராக 10-வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா துணை முதல்வர்களாக பதவியேற்றனர். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது.கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., 89; ஐக்கிய ஜனதா தளம் 85; லோக் ஜனசக்தி ராம் விலாஸ் பஸ்வான் கட்சி 19; ஹிந்துஸ் தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை பிடித்தன.என்.டி.ஏ., எனப்படும், தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற கூட்டம் பாட்னாவில் நடந்தது.
இதில் தற்போதைய முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தே.ஜ.., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பீகார் முதல்வராக, 10வது முறையாக இன்று (நவ.,20) நிதிஷ் குமார் பதவி ஏற்றார். கவர்னர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதல்வராக பாஜவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் பதவியேற்றனர். சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாறு காணாத வெற்றிக்கு, பீகார் மாநில மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார், தேஜ கூட்டணி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.