காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு அனாதீன நிலங்களுக்கு முறைகேடாக பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மோசடி செய்து, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெறப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெமிலி கிராமத்தில், 2.24 லட்சம் சதுரடி உடைய ஓ.எஸ்.ஆர்., எனப்படும், அரசு நிலங்களுக்கு, பத்திரம் பதிவு செய்தும், வல்லம், வடகால் கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்சாலை பகுதியில் உள்ள, ஓ.எஸ்.ஆர்., எனப்படும் அரசு நிலங்களுக்கு, போலி பத்திரம் தயாரித்தும், 21 கோடி ரூபாய் மோசடியாக இழப்பீடு பெறப்பட்டுள்ளது.

அத்துடன், வடகால் கிராமத்தில், 'வி.ஜி.பி., ஹவுசிங் டெவலப் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப்பிரிவில் அமைந்துள்ள, சாலை, பூங்கா பரப்பான, 7.25 லட்சம் சதுரடி இடத்தை அரசுக்கு விற்று, 21.08 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளது. அத்துடன், இந்த மோசடி தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், நில எடுப்பின் போது, மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராஜேந்திரன், தாசில்தார் எழில்வளவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தனி நபர்கள் என, 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக, சென்னை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும், ரியல் எஸ்டேட் அதிபர் கலைச்செல்வன் வீடு உட்பட, 15 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிக்கிய ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிப்கார்ட் விரிவாக்கம் நடப்பதை முன் கூட்டியே அறிந்த மோசடிகாரார்கள், போலி ஆவணங்கள் வாயிலாக, நிலத்தின் சந்தை மதிப்பை உயர்த்தி காட்டியுள்ளனர். இதனையடுத்து, போலி ஆவணங்கள் மூலம் அரசிடம் இருந்து கோடிக்கணக்கில் இழப்பீடு பெற்று மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், வி.ஜி.பி., குழுமத்தை சேர்ந்த ராஜேஷ், முக்கிய பங்கு வகித்து இருப்பதும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய, 1.56 கோடி ரூபாய் ரொக்கம், 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், 8.40 கோடி ரூபாய் வங்கி இருப்பு, 7.40 கோடி ரூபாய்க்கான பங்கு பத்திரங்கள் என, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.