தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, "ஊட்டி தென்னிந்தியாவின் மிகக் குளிர்ந்த மலைப் பிரதேசமாகத் தொடர்கிறது. டிசம்பர் 16 மற்றும் 17 மேகமூட்டம் மற்றும் மழையின் காரணமாக இரவு நேர வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, மேகங்கள் பூமியில் இருந்து வெளியேறும் வெப்பத்தை தடுத்து நிறுத்துவதால், இரவும் காலையும் சற்று வெதுவெதுப்பாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது குடைகளைக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டிசம்பர் 19 முதல் 21 வரையிலான நாட்களில் சென்னை மிகக் கடுமையான குளிரை சந்திக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை விட உள் மாவட்டங்களில் குளிர் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நவம்பர் மாதத்தில் 20 நாட்களுக்கும், டிசம்பர் மாதத்தின் கடைசி 10 நாட்களிலும் வறண்ட வானிலை நிலவியது. வரும் நாட்களில் மழை எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. மாத இறுதி வரை வறண்ட வானிலையே தொடரும். வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31, 2025 வரை மேலும் 10-20 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையால், சென்னைக்கு நீர் வழங்கும் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன" என தெரிவித்திருக்கிறார்.