உலக சினிமாவில் பிரம்மாண்டமான படைப்புகளை வழங்கிய ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி இருவரும் இணைந்து ‘அவதார்’ திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ குறித்து கலந்துரையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த உரையாடலில் இரு இயக்குநர்களும் தங்களது சினிமா அனுபவங்கள், கதை சொல்லலின் நுணுக்கங்கள், படைப்பாற்றல் மற்றும் பெரிய படங்களை வெளியிடும் போது ஏற்படும் மன அழுத்தம் குறித்து திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளனர்.
‘அவதார்’ திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை பகிர்ந்த ராஜமௌலி, அந்த படத்தை பார்த்த போது தன்னை ஒரு குழந்தை போல உணர்ந்ததாகவும், காட்சிகளின் பிரம்மாண்டம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினார். ஹைதராபாத்தில் உள்ள ஐமாக்ஸ் திரையரங்கில் ‘அவதார்’ ஒரு வருடம் ஓடியது பெரிய திரை அனுபவத்தில் அந்த படம் ஒரு மைல்கல் என்பதை நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஜேம்ஸ் கேமரூன், ராஜமௌலியின் சினிமா பார்வையை பாராட்டியதோடு, அவரது படப்பிடிப்பு செட்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தினார். குறிப்பாக புலிகளை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்கும் விதம் குறித்து ஆர்வம் இருப்பதாக கூறிய அவர், நகைச்சுவையாக “என் கையில் கேமரா கொடுத்தால், உங்கள் படத்தில் செகண்ட் யூனிட் டைரக்டராக வேலை செய்கிறேன்” என்று பேசியது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் தரும் தருணமாக அமைந்தது.
இந்த கலந்துரையாடல், உலகளாவிய அளவில் சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தும் இரண்டு மாபெரும் இயக்குநர்களின் மனநிலையும், அவர்களுக்கிடையேயான பரஸ்பர மரியாதையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 அன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது. 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் 3டி, 2டி மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் அவதார் மூன்றாம் பாகத்தை பெரிய திரையில் காண பெரும் ஆர்வம் காட்டி, முன்பதிவுகளையும் செய்து வருகின்றனர்.