தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன், தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி இணையும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழருவி மணியன் பேசுகையில், "காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் வந்ததால், அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் இருப்பது காங்கிரஸ் கட்சி அல்ல. அதுஒரு லிமிடெட் கம்பெனி.
இங்கிருக்கும் காங்கிரஸ் கமிட்டிக்கு ஏதாவது அதிகாரம் உண்டா?. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நினைத்தால் ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட அவரால் நிற்க வைக்க முடியாது. அதற்கும்கூட சோனியாகாந்தியிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் வர வேண்டும்.
மானமுள்ள கதர் சட்டை போட்ட காங்கிரஸ்காரர்கள் ஜி.கே.வாசன் பக்கம்தான் வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று ஆண்டுகள் ரஜினியிடம் வாரத்துக்கு மணிக்கணக்கில் அரசியல் பேசியுள்ளேன்.
அந்த மூன்று ஆண்டுகளில் ரஜினியிடம் நான் பெற்றது மூன்று கோப்பை மிளகு ரசம் மட்டுமே. நான் யாரிடமும் எதையும் எதிர்பார்த்து செல்கிறவன் அல்ல.
தமிழருவி மணியன்
கடந்த தேர்தலின்போது திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று சொன்னேன். அது தற்போது நடந்ததா? இல்லையா? தவெக தலைவர் விஜய்க்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன்.
விஜய் நன்றாகச் சிந்திக்க வேண்டும். அவருக்கென்று ஒரு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஒரு இளைய தலைமுறை கண்ணை மூடிக்கொண்டு அவர் பின்னால் செல்கிறது. அவர் பின்னால் அணி திரள்பவர்களைக் கணக்கெடுத்து பார்த்தால் வரும் தேர்தலில் தவெக 20 சதவீத வாக்குகளை உறுதியாகப் பெறும்.
``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது"- தமிழருவி மணியன்இந்த 20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு விஜயால் முதல்வராகிவிட முடியுமா? காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய். தமிழ்நாட்டில் தேடிப் தேடிப்பார்த்தாலும் காங்கிரஸூக்கு 3 முதல் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வங்கியே கிடையாது.
இரண்டு கட்சியின் 25 சதவீத வாக்கை வைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது. ஒரு தொகுதியில் கூட உங்களால் வெற்றி பெற முடியாது. உங்கள் 20 சதவீத வாக்கும் காங்கரஸூடன் சேர்ந்தால் வீணாகிவிடும். விஜய் அரசியலில் வாழ்வற்று போய்விடுவார்.
இணைப்பு விழா
20 சதவீத வாக்குகளை வைத்துக் கொண்டு காங்கிரஸூக்கு விஜய் காவடி எடுத்தாலும் முதல்வராக முடியாது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 23 சதவீதம், பாஜக 18 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இதை இரண்டையும் சேர்த்தால் 41 சதவீதம் வாக்குகள், விஜய்யுடைய 20 சதவீத வாக்குகளைச் சேர்த்தால் 61 சதவீதமாக மாறிவிடும்.
இந்தக் கூட்டணி அமைந்தால் 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெறலாம். எப்போது விஜய் அதிமுக, பாஜக இருக்கும் கூட்டணிக்கு வருகிறார் என்று செய்தி வருகிறதோ அப்போதே திமுக மூட்டையைக் கட்டிவிடும். திமுக தீய சக்தி என்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடந்த காலத்தில் சொன்னார்கள். தற்போது விஜய்யும் சொல்கிறார்.
திமுக-வை நல்ல சக்தி என்று எந்த நேர்மையாளனாவது சொல்வானா? விஜய்க்கு உண்மையில் சமூக நோக்கம் இருந்தால், திமுக-வை எதிர்க்க அதிமுக, பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய வேண்டும்" என்றார்.
காந்தி To கோட்சே பயணமா?! - மனம் திறக்கும் தமிழருவி மணியன்