பீகாரைத் தொடர்ந்து தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட SIR (Special Intensive Revision) எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த வரைவு பட்டியலின்படி, தமிழகம் முழுவதும் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய SMS சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையைப் பயன்படுத்த, பொதுமக்கள் தங்களது மொபைல் போனில்
ECI என்று டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண் (உதாரணமாக: ECI SXT000001) பதிவிட்டு,
1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.
இதற்கு பதிலாக, சில நொடிகளில் அவர்களது செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தியில், வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி (பூத்) விவரம் உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்ட BLO (Booth Level Officer)-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தகவலும் குறுஞ்செய்தியாக வரும்.
மேலும், நேரடியாக முகாம்களுக்கு செல்ல இயலாதவர்கள்,
https://www.eci.gov.in/voters-services-portal என்ற இணையதளம் அல்லது
Voter Helpline App செயலியின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள், தங்களை மீண்டும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு ஜனவரி 18-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.