தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை சமந்தா பங்கேற்றபோது, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முயன்ற ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கிய சமந்தா, பாதுகாப்பு பணியாளர்களின் உதவியுடன் அவசரமாக வெளியேறி தனது காரில் ஏறிச் சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிகழ்வு மட்டுமல்ல, சமீப காலமாக பிரபல நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் ரசிகர் கூட்டத்தின் கட்டுப்பாடற்ற நடத்தை காரணமாக அசௌகரிய நிலைக்கு தள்ளப்படுவது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இதற்கு முன், ‘ராஜாசாப்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்திலுள்ள பிரபல மாலில் நடைபெற்றபோது, நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து அவர் வெளியேறிய சமயத்தில் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால், அவரும் கடும் நெரிசலில் சிக்கினார்.அந்த நேரத்தில் சிலர் எல்லை மீறி நடந்துகொண்டதாக கூறப்படுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கட்டுப்பாடற்ற கூட்டத்தில் திணறிய நிதி அகர்வால், பின்னர் பாதுகாப்புடன் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இதன் தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய சம்பவங்கள், ரசிகர்களின் பொறுப்பின்மை மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றன. ரசிகர் மரியாதை, தனிப்பட்ட எல்லை மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அவசியம் என்ற குரல் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.