திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது; இந்தாண்டு அப்படித்தான் ஏற்றப்பட்டது; திருமாவளவன்..!
Seithipunal Tamil December 29, 2025 11:48 AM

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அப்படித்தான் ஏற்றப்பட்டது என்று வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அத்துடன், 1926 ஆண்டு 'எது முஸ்லிம்களுக்கு உரியது, எது காசி விசுவநாதர் கோயிலுக்கு உரியது' என தீர்ப்பு வழங்கி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர் என்று பேசியுள்ளார்.

மதுரை திருமோகூர் திருமண விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் பேசும் போது கூறியதாவது:

திருப்பரங்குன்றம் விவகாரம் திட்டமிட்ட ஒன்று. தேர்தலுக்கு முன்பாக ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறை நடத்த வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்ட அவர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும் சுதந்திரமாக இயங்க முடிகிறது என்று வெறுப்பை வளர்த்து வருகின்றனர் என்று பேசியுள்ளார்.

அத்துடன், ஹிந்துக்கள் நாம் சிறுபான்மை ஆகிவிடுவோம் என்று இந்தியா ஹிந்துக்கள் நாடாக இல்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ நாடாக மாறிவிடும் என ஒரு அச்சத்தை சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன என்று திருமா பேசியுள்ளார்.

தற்போது சிலர் கடப்பாறைகளை துாக்கிக்கொண்டு களத்துக்கு வருகின்றதாகவும், இது மிகவும் ஆபத்தான அரசியல் என்றும் திராவிட கட்சிகளை இழிவு படுத்துகின்றனர். விமர்சனம் என்பது வேறு; இழிவுபடுத்துதல் என்பது வேறு என்றும் கூறியதோடு, விமர்சனம் செய்ய வேண்டாம் என நாம் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் வழக்கம் போல உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அப்படித்தான் ஏற்றப்பட்டது. 1926 ஆண்டு எது முஸ்லிம்களுக்கு உரியது, எது காசி விசுவநாதர் கோயிலுக்கு உரியது என தீர்ப்பு வழங்கி பிரச்னைகளுக்கு அன்றைய நீதிபதி ராமையர் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது நீதித்துறையில் இருப்பவர்களே வலிந்து வந்து ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக தீர்ப்புகளை எழுதுகின்றனர் என்றால், எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் சூழல் உருவாகி வருகிறது என்பதை பார்க்க முடிகிறது என்று விமர்சித்துள்ளார்.

வெறும் தேர்தல் கணக்கு மட்டும் நாம் போட்டால் மக்களை யார் காப்பாற்றுவது என்றும், மரபுகளை யார் காப்பாற்றுவது என்றும்,  ஆணவக் கொலைகளை எவ்வாறு தடுக்க முடியும். எனவேதான் அம்பேத்கர் சிலை திறக்கும் இடங்களில், ஈ.வெ.ரா.,வின் சிலைகளும் திறக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

தமிழக்தில் பா.ஜ., ஆட்சியைப் பிடிக்க அ.தி.மு.க., போன்ற கட்சிகள் துணை நிற்கின்றன என்றும்,  சனாதன கொள்கைவாதிகள் வேரூன்ற அ.தி.மு.க., வினர் தெரிந்தே இடம் தருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். விழிப்புணர்வுடன் செயல்பட்டு வலதுசாரிகளை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.