கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று (டிசம்பர் 29) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ள சிபிஐ, முதற்கட்டமாக கரூரில் முகாமிட்டு ஆவணங்களைச் சேகரித்த நிலையில், தற்போது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும் அவர்கள், கூட்ட நெரிசலுக்கான காரணங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எழுப்பும் கேள்விகளுக்குத் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்களிடம் கரூரில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், டெல்லியில் நடைபெறும் இந்த நேரடி விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.