நேரடியாக திமுக அரசை விமர்சித்த காங்கிரஸ்...! கூட்டணி கணக்கு மாறுகிறதா? கனிமொழிக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த பதிலடி!
Seithipunal Tamil December 29, 2025 04:48 PM

திருப்பூர் பல்லடத்தில் நாளை நடைபெறவுள்ள திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டிற்கான பணிகளை அக்கட்சியின் செயலாளர் கனிமொழி பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், "கடந்த ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டைக் கடனில் விட்டுச் சென்றனர்; ஆனால் முதல்வர் ஸ்டாலினின் உழைப்பால் இன்று தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக வளர்ந்துள்ளது" என எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணியின் விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.

"உத்தரப் பிரதேசத்தை விடத் தமிழகக் கடன் அதிகம்":
கனிமொழியின் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் (X) தளத்தில் சில முக்கியத் தரவுகளைப் பகிர்ந்துள்ளார்:

கடன் உயர்வு: 2010-ல் உத்தரப் பிரதேசத்தின் கடன் தமிழகத்தை விட இருமடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தின் கடன் சுமை உத்தரப் பிரதேசத்தையே விஞ்சி, இந்தியாவிலேயே அதிக நிலுவைக்கடன் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது.

வட்டிச் சுமை: வட்டி செலுத்தும் விகிதத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது.

GDP விகிதம்: தமிழகத்தின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம், கோவிட் காலத்திற்கு முந்தைய நிலையை விட இப்போது அதிகமாக உள்ளதால் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பின்னணி:
மத்திய சென்னை எம்பியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி, இம்மாத தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்திருந்தார்.

இந்தச் சூழலில், ஆளும் திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து அவர் விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக ஆட்சியில் பங்கு என செல்வப்பெருந்தகை நேற்று பேசியதும் கூட்டணி மாறும் நகர்வா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.