அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து திமுக அரசுக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான திமுக ஆட்சியில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 56 மாதங்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வீதம் கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாநிலத்தின் கடன் சுமை 4 லட்சம் கோடி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த கடன் தொகையை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், ஊழல் செய்வதற்காகவே அரசு பயன்படுத்தியுள்ளதாக அவர் சாடினார். ஊழல் தொடர்பான ஆதாரங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், முறையான விசாரணைக்கு பின் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran