நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி (22), சேலத்தில் தங்கி சித்த மருத்துவம் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தங்கியிருந்த அறையிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.
முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
போலீஸாரின் தீவிர விசாரணையில், வர்ஷினியின் வளர்ப்புத் தந்தை வரதராஜன் தான் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்பது அம்பலமானது.
வர்ஷினியின் தாய் உஷாவுக்கு வரதராஜன் இரண்டாவது கணவர் ஆவார். வர்ஷினியைத் தனது சொந்த மகளாகவே கருதிய வரதராஜன், அவருக்காகத் தனக்கெனக் குழந்தை கூட பெற்றுக் கொள்ளாமல் வர்ஷினியின் படிப்புக்காக உழைத்து வந்துள்ளார். ஆனால், வர்ஷினியோ நெல்லையைச் சேர்ந்த 40 வயதுடைய, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான டேக்வாண்டோ பயிற்சியாளர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
பலமுறை தடுத்தும் கேட்காத வர்ஷினி, சமீபத்தில் அந்த நபரைத் ரகசியத் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வரதராஜன், சேலத்திற்குச் சென்று மகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஆத்திரத்தை அடக்க முடியாமல் மகளின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தப்பியோடியுள்ளார். பெற்ற மகளாக நினைத்து வளர்த்த தந்தையே, கௌரவத்திற்காக மகளைக் கொன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.