ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில், கமேனி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருவதோடு, அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றதால் வன்முறை வெடித்துள்ளது.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் கமேனி தலைமையிலான ஈரான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் போது போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குறித்த மக்கள் போராட்டத்தில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பாதுகாப்புப்படையினர் 21 பேர், 09 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 02 ஆயிரத்து 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.