பாகிஸ்தான் அரசால் இத்தனை காலமும் பாதுகாத்து வளர்க்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி, இப்போது தனது சொந்த நாட்டு அரசுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியுள்ளார். பாகிஸ்தான் பொருளாதாரச் சீரழிவைச் சந்தித்து வரும் வேளையில், அந்த நாட்டுத் தலைவர்களை “திருடர்கள்” என அவர் விமர்சித்துள்ளது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த தளபதியான முகமது அஷ்பக் ராணா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் நிலைமை, பலுசிஸ்தான் மாநிலத்தைப் போலவே மிகவும் பரிதாபமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஊழல்வாதிகள் மற்றும் திறமையற்றவர்கள் என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் பொருளாதார நிலையை எள்ளி நகையாடிய ராணா பேசுகையில், “பாகிஸ்தான் இன்று ஐஎம்எஃப் (IMF), சீனா, அமெரிக்கா, சவுதி அரேபியா என உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது. பாகிஸ்தானில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் லட்சக்கணக்கிலான கடனுடன் பிறக்கிறது. ஊழல் செய்யவில்லை என்று கூறும் தலைவர்கள், வாங்கிய கடனை என்ன செய்தார்கள்? அந்தப் பணம் சரியாக முதலீடு செய்யப்பட்டிருந்தால், இன்று பாகிஸ்தான் சவுதி அரேபியாவையோ அல்லது இங்கிலாந்தையோ விட முன்னேறிய நாடாக இருந்திருக்கும்” என்று சாடியுள்ளார்.
வழக்கமாக இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தான் இராணுவத்தால் ஏவிவிடப்படும் ஒரு அமைப்பின் தளபதி, இப்போது தனது நாட்டுப் பொருளாதார அவமானம் குறித்தும், ஆட்சியாளர்களின் ஊழல் குறித்தும் சொற்பொழிவு ஆற்றுவது பாகிஸ்தான் அரசுக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளைத் தங்களின் ‘மூலோபாய சொத்தாக’ (Strategic Assets) கருதி வந்த பாகிஸ்தான் இராணுவத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணியாகும். ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, சட்டத்தின் ஆட்சி பலவீனப்படும்போது, அந்த அரசால் வளர்க்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளே அந்த அரசைத் தூக்கியெறியத் துணியும் என்பதற்கு இதுவே சாட்சி.
மேலும் வரலாறு காட்டும் உண்மைகளின்படி, இதுபோன்ற பயங்கரவாத சக்திகள் தங்களுக்கு உணவு அளித்த கையைத் தின்னத் தொடங்குவது இதுவே முதல்முறை அல்ல. பாகிஸ்தான் பற்றவைத்த நெருப்பு இப்போது அதன் சொந்த வீட்டைச் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.