`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்
Vikatan February 13, 2026 03:48 AM

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த தீர்மானத்தில், `ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதோடு, அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்' என்றும் கோரப்பட்டிருக்கிறது.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ``இந்தியாவை அமெரிக்காவிடம் பிரதமர் மோடி விற்றுவிட்டார். விவசாயிகளுக்கு எதிராக அமெரிக்க பொருள்களுக்கு இந்தியக் கதவை திறந்துவிட்டிருக்கிறார். நாம் எங்கு எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது. நம் சுயமரியாதையை இழந்து, அடிமையைப் போல அமெரிக்காவிடம் இந்தியா உரையாற்றியிருக்கிறது" எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

நிஷிகாந்த் துபே

இந்த நிலையில்தான் எம்.பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ``நாட்டைப் பலவீனப்படுத்த விரும்பும் ஜார்ஜ் சோரோஸ் போன்ற சக்திகளின் உதவியுடன் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.

இது குறித்து இன்று மக்களவையில் நான் தீர்மானம் தாக்கல் செய்துள்ளேன். ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியற்றவர். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும்." என்றார்.

இதற்கு முன்பே, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``ராகுல் காந்தி சபையை தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும் பா.ஜ.க உறுப்பினர்கள் 'அவமதிப்பு நோட்டீஸ்' தாக்கல் செய்வார்கள்" என்று கூறியிருந்தார். ஆனால், எம்.பி நிஷிகாந்த் துபே அதைவிட தீவிரமான 'முதன்மைத் தீர்மானம்' தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.