ஐசிஏஐ எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India - ICAI), சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் (Chartered Accountants) இறுதித் தேர்வு மற்றும் இடைநிலைத் தேர்வு (Intermediate) முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த முடிவுகளில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி தீக்ஷா கோயல் (Diksha Goyal) அபார சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் சி.ஏ இறுதித் தேர்வில், தீக்ஷா கோயல் 81 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் (All India Rank 1) பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது இந்த வெற்றிக்குக் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளை ICAI-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான icai.nic.in அல்லது icai.org ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளுடன், அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலையும் ஐசிஏஐ வெளியிட்டுள்ளது. இதில் தீக்ஷா கோயல் முதலிடம் வகிக்கிறார். அதேபோல அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை அனிருத் கார்க் என்னும் மாணவரும் மூன்றாவது இடத்தை இரண்டு பேரும் பெற்றுள்ளனர்.
குறிப்பாக ரிஷப் ஜெயின், துருவ் தேம்ப்ளா ஆகியோர் 3ஆம் இடத்தை பெற்றுள்ளனர். மற்ற பிற இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.