10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத் தாள்களில் பயன்படுத்தப்படாத விடைத் தாள்களை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் முக்கிய் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
மார்ச்/ ஏப்ரல் 2026ஆம் ஆண்டில் மேல்நிலை முதலாம்/ இரண்டாம் ஆண்டு மற்றும் இடைநிலை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக இன்று 12ஆம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கான தேர்வு தொடங்கி நடந்தது.
பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், தேர்வு மையங்களில் தேர்வு முடிந்தவுடன் அன்றன்றே வருகை புரியாத மாணவர்களின் பயன்படுத்தாத முதன்மை விடைத் தாள்களை கட்டுகளாகக் கட்டி முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் ஆகியோர் 2 ஆசிரியர்கள் முன்னிலையில் தேதியுடன் கையொப்பமிட்டு சீலிடப்பட வேண்டும். அவற்றை, பயன்படுத்தாத வினாத்தாள் பாதுகாப்பதைப் போன்றே பாதுகாப்பாக அறையில் வைத்து பூட்டி அரக்கு முத்திரையிடப்பட வேண்டும்.
தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், உழைப்பூதியம் மற்றும் சில்லரைச் செலவினம் தொடர்பான பற்றுச் சீட்டுகளை 08.04.26 முதல் 13.04.26 வரையிலான நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஒப்படைக்கும்போது ஒன்றைப் பின்பற்ற வேண்டும்.
தேதி வாரியாக கட்டுகள் கட்டி சீலிடப்பட்ட பயன்படுத்தாத விடைத் தாள்களையும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பார்வை திறன் குறையுடைய மாணாக்கர் ஒருவருக்கு திரை வாசிப்பு மென்பொருளைப் பயன்படுத்தி கணினி மூலம் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மேல்நிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல் கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்கள் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு, பெரிய எழுத்துக்களில் A4 அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (Logarithmic books) 20,000 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் கணக்குப் பதிவியல் பாடத்திற்கும் தேர்வர்கள் Ordinary Calculator without Programming பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.