மார்ச் 2, 2026: இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (Islamic Revolutionary Guards Corps – IRGC) இன்று வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உயர்ந்த தலைவர் ஆயத்துல்லா அலி கமேனெய்க்கு உட்பட்ட அமைப்பாக இருக்கும் தாங்கள், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் தெல் அவீவிலுள்ள அலுவலகத்தையும், ஹைஃபா நகரில் உள்ள பாதுகாப்பு மற்றும் இராணுவ மையங்களையும், கிழக்கு ஜெருசலேமிலுள்ள முக்கிய இடங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்த திட்டம்:இந்த தாக்குதல் உலகளாவிய பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமான ரசு தனூரா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அராம்கோ நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடாத நிலையில், சவுதி பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் அல் அரேபியா தொலைக்காட்சியிடம், ரசு தனூரா நிலையத்தை குறிவைத்து வந்த இரண்டு ட்ரோன்கள் தடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமை முதல் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் பல்வேறு முக்கிய இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இராணுவ தளங்கள், பாதுகாப்பு மையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கமேனெய் உயிரிழந்ததைத் தொடர்ந்து தொடங்கிய இந்த மோதல், தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தை முழுமையாக சூழ்ந்துள்ளது.
ஆதிகரிக்கும் போர் பதற்றம்:இந்தப் போரின் தாக்கம் ஈரான் மற்றும் இஸ்ரேலைத் தாண்டி பரவி வருகிறது. துபாய், பஹ்ரைன், ஈராக் உள்ளிட்ட பல பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நாடுகளில் விமான சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன; வெளிநாட்டு குடிமக்களுக்கு அவசர பாதுகாப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணை – கப்பல் போக்குவரத்து பாதிப்பு:மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் தினசரி எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% கையாளப்படும் இந்த முக்கிய கடற்பாதையில் பாதுகாப்பு அச்சம் நிலவுவதால், பல கப்பல் நிறுவனங்கள் தங்களது பயணங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதன் விளைவாக உலகளாவிய எண்ணெய் விலைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.
மொத்தத்தில், இந்த மோதல் பிராந்திய அரசியல் மற்றும் உலக பொருளாதார நிலைமைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையாக மாறியுள்ளது.