ஜெயலலிதாவின் பொற்காலம் மீண்டும் வரணும்.. துரோகிகளுக்கு தக்க பதிலடி.. மேடையில் அனல் பறக்கப் பேசிய நடிகை விந்தியா..!!
SeithiSolai Tamil March 07, 2026 02:48 AM

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து மற்றும் பல உள்ளூர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.தனது உரையில் ஜெயலலிதாவின் ஆட்சியையும், அவர் கொண்டு வந்த திட்டங்களையும் விந்தியா நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கும் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்த ஜெயலலிதா, தொட்டில் குழந்தை திட்டம், பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி போன்ற பல வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைச் செயல்படுத்தினார் என்று குறிப்பிட்டார்.

ஜெயலலிதா மக்களுக்காகவே வாழ்ந்த தலைவி என்றும், அவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.தொடர்ந்து அரசியல் விமர்சனங்களை முன்வைத்த விந்தியா, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கட்சியில் துரோகம் இழைத்தவர்களைச் சாடிய அவர், இத்தகையவர்களைத் தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், பெண்களின் பாதுகாப்புக்கும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.