நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது அடுத்தப்படத்தில் பிரபல தயாரிப்பாளருடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இதனால் இனிமேல் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். விஜயின் கடைசிப் படமாக ஜனநாயகன் உருவாகியிருந்தாலும் சென்சார் பிரச்னை காரணமாக அப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் இரண்டு மாதங்களாக ரிலீசாகாமல் உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் விஜய் படம் தேர்தல் நடைமுறை முடிவடைந்த பிறகு அவரின் பிறந்தநாளையொட்டு ரிலீசாகும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே அரசியலில் விஜய் அடுத்தடுத்து பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் சம்பவம் தொடங்கி ஜனநாயகன் பிரச்னை, மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு, நடிகை த்ரிஷாவுடன் ஜோடியாக நிகழ்ச்சியில் பங்கேற்றது என அடுத்தடுத்து விஜய் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் தன் மீதான எதிர்மறை விஷயங்களுக்கு விஜய் விரைவில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் முழு மூச்சாக கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய அப்பா விஜய் வழியில் நடிகராக இல்லாமல், தனது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் வழியில் இயக்குநராக களம் கண்டுள்ளார். அவர் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் கதையை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன், யோக் ஜேபி, சம்பத் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தனது அப்பா விஜயுடன் பிரச்னை, விஜய் மீதான எதிர்மறை விமர்சனம் என எதையும் கவனத்தில் கொள்ளாமல் ஜேசன் சஞ்சய் கவனம் முழுக்க சினிமாவின் மீது உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இப்படியான நிலையில் ஜேசன் சஞ்சய் தனது 2வது படத்தை இயக்க தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இவர் 2026 பொங்கலுக்கு வெளியான ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படத்தை தயாரித்தவர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.