கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கௌதமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேச தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூட்டத்தில் இருந்த மக்கள் மெல்ல கலைந்து செல்ல தொடங்கினர். இதனால் மைதானத்தின் பல பகுதிகளில் நாற்காலிகள் காலியாக கிடந்தன.
கூட்டம் கலைந்து செல்வதை கவனித்த கௌதமி, மேடையிலேயே அது குறித்து வெளிப்படையாக பேசினார். "ஆரம்பத்தில் வந்தவர்கள் சிலர் வீட்டுக்கு சென்றதை பற்றி எனக்கு வருத்தமில்லை. அவர்களது கஷ்டமும், வீட்டு சூழ்நிலையும் எனக்கு புரியும்" என்று எதார்த்தமாக பேசினார்.
திமுக ஆட்சியின் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்த அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், அதற்கு அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உரையின் இறுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியில், "செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?" என மூன்று முறை அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த தொண்டர்கள் "செய்வோம்! செய்வோம்!" என உற்சாகமாக பதிலளித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Edited by Siva