“உங்க உதவி இப்போ தேவையில்ல, ஆனா நீங்க மறுத்தத மைண்ட்ல வச்சுருப்போம்“; பிரிட்டனை வெளுத்த ட்ரம்ப்
ஸ்ரீராம் ஆராவமுதன் March 08, 2026 12:44 PM

இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்திவரும் அமெரிக்கா, முன்னர் பிரிட்டனிடம் ராணுவ தளங்களை தருமாறு கேட்டபோது அதனை அவர்கள் மறுத்தனர். இந்த நிலையில், தற்போது நடைபெறும் போரில்  அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு உதவுவதற்காக விமானம் தாங்கி கப்பல்களை அனுப்ப பிரிட்டன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதனை மறுத்து, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவர் கூறியுள்ள என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

பிரிட்டனை விமர்சிக்கும் ட்ரம்ப்பின் பதிவு என்ன.?

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஒரு காலத்தில் நமது சிறந்த நட்பு நாடான, அனைத்திலும் சிறந்ததாக இருந்த பிரிட்டன், இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது. அது சரி, பிரதமர் ஸ்டார்மர், எங்களுக்கு இனி அவை தேவையில்லை. ஆனால் நாங்கள் நினைவில் கொள்வோம். நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்ட போரில் இணைபவர்கள் எங்களுக்குத் தேவையில்லை!“ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவிற்கு ராணுவ தளத்தை மறுத்த பிரிட்டன்

முன்னதாக, போர் தொடங்குவதற்கு முன், ஈரானை தாக்குவதற்கு ஏதுவாக, பிரிட்டனின் ராணுவ தளத்தை பயன்படுத்த அனுமதி கேட்டது அமெரிக்கா. ஆனால், பிரிட்டன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்திய பெருங்கடலில் டியாகோ கார்சியாவில் ராணுவ தளத்தை வைத்துள்ளது பிரிட்டன். இந்த ராணுவ தளம், கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து 3,200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதை எளிதாக்கும். அதனால், அந்த ராணுவ தளத்தை பிரிட்டனிடம் கேட்டுள்ளது அமெரிக்கா.

ஆனால், சர்வதேச சட்டம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியை கருத்தில் கொண்டு, அந்த தளத்தை வழங்க முடியாது என்று பிரிட்டன் மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. மேலும், ஈரான் மீது முக்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்துவது, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று கூறி, ஸ்விண்டன் அருகே உள்ள விமானப்படை தளத்தை கெடுக்கவும் பிரிட்டன் மறுத்தது.

அமெரிக்கா-பிரிட்டன் இடையே மோதல் போக்கு

மொரீஷியஸிடம் சாகோஸ் தீவுகளை மீண்டும் ஒப்படைப்பதற்கு ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த விவகாரத்தில் ஏற்கனவே அவர்களுக்குள் மோதல் போக்கு நிலவியது. எனினும், பிப்ரவரி 17-ம் தேதி, பிரிட்டன் பிரதமர் கெர் ஸ்டார்மருடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, ஈரானை தாக்க பிரிட்டனின் ராணுவ தளத்தை பயன்படுத்த ட்ரம்ப் அனுமதி கோரினாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அதன் பிறகுதான், பிரிட்டன் ராணுவ தளத்தை வழங்க மறுத்ததாக செய்தி வெளியானது.

இதனால் ட்ரம்ப் கோபமடைந்த நிலையில், பிரிட்டனுடன் மோதல் போக்கு ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் தான், தற்போது விமானம் தாங்கி கப்பலை அனுப்ப முன்வந்த பிரிட்டனின் உதவியை ஏற்க ட்ரம்ப் மறுத்துள்ளார். அதோடு, அவர்கள் செய்ததை ஞாபகம் வைத்திருப்பேன் என்று வேறு கூறியுள்ளார். இதனால், எதிர்காலத்தில் பிரிட்டனுடன் அமெரிக்கா மோதல் போக்கையே கடைபிடிக்கும் என்பது தெளிவாகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.