திருச்சி வரும் பிரதமர் மோடி.. ரூ.16,650 கோடியில் பல திட்டங்கள் வெயிட்டிங்.. ஏற்பாடுகள் என்னென்ன?
TV9 Tamil News March 10, 2026 11:48 AM

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள சூழ்நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் மத்தியில் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மாநாடு நடைபெற்றது. இதில், இரு இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி இருந்தார். இந்த நிலையில், நாளை புதன்கிழமை ( மார்ச் 11) மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். முன்னதாக, அவர் கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் ரூ,5,650 கோடி வளர்ச்சி திட்டங்கள்

பின்னர், திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மாலை சுமார் 5 மணியளவில் பங்கேற்று உரையாற்றுவதுடன், ரூ,5,650 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவடைந்த வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வளர்ச்சி திட்டங்களில் சாலைகள் இணைப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு, ரயில் சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் பல்வேறு திட்டங்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

மேலும் படிக்க: Villivakkam Constituency Election 2026: 5 முறை வெற்றிப்பெற்ற திமுக.. இம்முறையும் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி கிடைக்குமா?

ரூ.3,680 கோடியில் இயற்கை எரிவாயு விநியோகம்

இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ரூ.3,680 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு விநியோக குழாய்கள் அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் 8.8 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு இயற்கை எரிவாயு நேரடியாக குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படும். இதே போல, மணலியில் சுமார் ரூ.1,490 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மசகு எண்ணெய் கலவை ஆலை மற்றும் சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்ட 89 கிராமங்களின் சாலைகள் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கிறார்.

தமிழகம்-கேரளத்தில் ரூ.16,650 கோடிக்கு திட்டம்

மேலும், சோழபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை 81- இல் பசுமை புறவழிச் சாலை அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டுகிறார். இதில், முக்கியமாக தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் 2 அம்ரித் பாரத் விரைவு ரயில், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார். அதன்படி, தமிழகம் மற்றும் கேரளாவில் மொத்தமாக ரூ.16,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், அடிக்கல்லும் நாட்டுகிறார்.

மேலும் படிக்க: 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்.. உழைக்க நான் தயார்.. நீங்கள் தயாரா? முதல்வர் ஸ்டாலின்..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.