எரிவாயு தட்டுப்பாடு அச்சம்: உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...! - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Seithipunal Tamil March 11, 2026 12:48 AM

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் ஈரான்- இஸ்ரேல் போர் சூழல் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும் வெளிப்படத் தொடங்கியுள்ள நிலையில், எரிவாயு கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகி வருவதாகத் தெரிவிக்கிறது.

இதன் காரணமாக சில பகுதிகளில் உணவகங்கள், சிறிய ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் செயல்பாடுகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து, எரிவாயு சிலிண்டர்கள் தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய அரசை எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் உணவகங்கள் தடையின்றி இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகளை மாநில அரசும் செய்து தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், ஏழை மற்றும் எளிய மக்களின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்கள் முழு திறனுடன் செயல்பட்டு, எந்தவித தடையுமின்றி உணவு வழங்கப்படுவதை மாநில அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.