கொலொம்பே என்பது ஈரானின் பழமையான மற்றும் பிரபலமான இனிப்புகளில் ஒன்றாகும். குறிப்பாக கெர்மான் பகுதியின் பாரம்பரிய இனிப்பாக அறியப்படும் இது, பேரிச்சம்பழத்தின் இனிப்பு சுவையும், ஏலக்காய் நறுமணமும் கலந்து உருவாகும் சுவையான சிற்றுண்டி.
வெளிப்புறத்தில் மென்மையான மாவும், உள்ளே இனிப்பான பேரிச்சம் பழப் பூரணமும் கொண்ட இந்த இனிப்பு, தேநீர் நேரத்தில் பரிமாறப்படும் ஒரு சிறப்பு உணவாகக் கருதப்படுகிறது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
பேரிச்சம்பழம் (வித்தை நீக்கியது) – 1 கப்
வெண்ணெய் அல்லது நெய் – ½ கப்
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
இலவங்கப்பட்டை தூள் – சிறிதளவு
பிஸ்தா அல்லது எள் – அலங்கரிக்க
பால் – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை

தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு உப்பு, நெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அதில் பால் சேர்த்து மென்மையான மாவாக பிசைந்து 20 நிமிடங்கள் ஓய்வாக வைக்க வேண்டும்.
பேரிச்சம்பழத்தை நன்றாக மசித்து, அதில் ஏலக்காய் தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து இனிப்பான பூரணமாக தயார் செய்ய வேண்டும்.
பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து, அதை தட்டையாக விரித்து நடுவில் பேரிச்சம்பழ பூரணத்தை வைத்து மூடி வடிவமைக்க வேண்டும்.
மேலே பிஸ்தா அல்லது எள் தூவி அலங்கரிக்க வேண்டும்.
பின்னர் முன் சூடாக்கிய அடுப்பில் சுமார் 15–20 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை வேகவைக்க வேண்டும்.