மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரின் தாக்கம் உலகளாவிய எரிபொருள் சந்தையை உலுக்கியுள்ள நிலையில், அதன் அதிர்வுகள் பாகிஸ்தானையும் கடுமையாகப் பாதித்துள்ளன. எரிபொருள் விநியோகம் சீர்குலைந்ததால் அந்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.

இந்த நெருக்கடியை சமாளிக்க அவசர நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
மேலும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் எரிபொருள் செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையும் பாதியாகச் சுருக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வங்கிகளைத் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், அதிலும் 50 சதவீத ஊழியர்களுடன் குறைந்தளவு பணிச்சுமையுடன் இயங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.