'இந்தியா எதிர்ப்பு கொள்கையுள்ள ராகுல் காந்தி நாட்டிற்கு எதிராக பேசினால் 200 முறை குறுக்கிடு செய்வோம்'; கவுரவ் கோகாய்க்கு சிவசேனா எம்.பி. பதிலடி..!
Seithipunal Tamil March 11, 2026 06:48 AM

இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 02-வது அமர்வு நேற்று தொடங்கியது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் பேசுகையில்; பிப்ரவரியில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேச விரும்பியபோது சபாநாயகர்,  சபாநாயகர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் கருவூல பெஞ்சுகளின் மூத்த உறுப்பினர்களால் 20 முறை குறுக்கீடு செய்ததாக நாங்கள் கூறினோம் என்பதை சுட்டிக்காட்டினார்.

அத்துடன், முன்கூட்டியே திட்டமிட்டு அவர் குறுக்கிடப்பட்டார் என்றும், சபாநாயகர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை. சில முக்கியமான பிரச்சினைகளை அவைக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த முயற்சிக்கும்போது மீண்டும் மீண்டும் குறுக்கிடப்பட்டதாக குற்றம் சுமத்தினார்.

அத்துடன், எதிர்காலத்தில், நாடாளுமன்ற பதிவுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு, எழுத்துப்படிகள் ஆராயப்படும் போது, எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடையூறு விளைவித்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜுதான் என்பதை புள்ளிவிவரங்கள் சொல்லும் என்று தெரிவித்தார்.

அதற்கு அமித் ஷா நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு தான் அதிகம் குறுக்கிட்டார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சியை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே இது குறித்து கூறுகையில், நாட்டுக்கு எதிராக பேசினால் 200 முறை குறுக்கிடு செய்வோம் என அதிரடியாக பதிலளித்துள்ளார்.

அதாவது, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசும்போது 20 முறை குறுக்கிடப்பட்டதாக கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார். நான் அவருக்கு சொல்ல விரும்புகிறேன், நாட்டிற்கு எதிராக நீங்கள் பேசினால், 200 முறை குறுக்கிடு செய்வோம் என்று குறிப்பிட்டார். 

அத்துடன், அவர்களுடைய (ராகுல்காந்தி) கொள்கை இந்தியா எதிர்ப்பு. ராகுல் காந்தியின் பேச்சு பாகிஸ்தானில் காட்டப்பட்டது. அவருக்கு ஆர்வம், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை விட, பாகிஸ்தான் எத்தனை விமானங்களை வீழ்த்தியது, அதை உலகிற்குச் சொல்வது என்பதில்தான் இருந்தது என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

மேலும், பிரதமர் மோடியை, கோகோய் பலவீனமானவர் என்று அழைத்தார். எந்த நாடும் பலவீனமான நாட்டுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் எங்களுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்று பதிலடி கொடுத்துள்ளார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.