சர்வதேச அளவில் நிலவும் இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக, தமிழகத்தில் சமையல் எரிவாயு (LPG) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெரும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மற்றும் சென்னை ஓட்டல் சங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். “தற்போது ஓட்டல்களில் இருக்கும் சிலிண்டர் இருப்பு இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே வரும், அதன் பிறகு தட்டுப்பாடு ஏற்பட்டால் உணவகங்களை நடத்துவது மிகப்பெரிய சவாலாக மாறும்” என விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்பெல்லாம் சிலிண்டர் முன்பதிவு செய்த உடனே கிடைத்த நிலையில், தற்போது 3 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த இக்கட்டான நிலையைத் தவிர்க்க, உணவகங்களை ‘எஸ்மா’ (ESMA) சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிகமாக வாங்கி தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பொதுமக்களுக்கான உணவு விநியோகம் பாதிக்கப்பட்டு விலை உயர்வு ஏற்படும் என்றும் வணிகர் சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.