இஸ்லாமியர்கள் புனித மாதமாக கருதும் ரமலான் மத்தில் 30 நாட்கள் அவர்களின் ஏக இறைவன் அல்லாஹ்வை நினைத்து நோன்பை தொடங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இஸ்லாமிய நாட்காட்டியின் படி, ரமலானுக்கு அடுத்த மாதமான ஷவ்வால், பிறை தென்பட்டவுடன் தொடங்கும். அதன் அடிப்படையில் பிறை தென்பட்ட மறுநாள் முஸ்லிம்கள் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவார்கள்.
அதன்படி இன்று மாலை பிறை தேடும் பணி நடைபெற்ற நிலையில், பிறை தெரியாத காரணத்தினால், நாளை மறுநாள் மார்ச் 21ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் ரமலான் பெருநாள் கொண்டாடப்பட்ட மறுநாள் இந்தியாவில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் ரமலானை கொண்டாடுகின்றனர். அதன்படி, இன்று பிறை தெரியாத நிலையில், அதாவது, ஈத்-உல்-பித்ர் பிறை தென்படாததால், மார்ச் 21ஆம் தேதிக்கு ரமலான் தள்ளிப்போயுள்ளது.
புதுச்சேரியிலும் ரம்ஜான் பண்டிகை நாளை மறுதினம் சனிக்கிழமை கொண்டாடப்படும் என புதுச்சேரி அரசு வக்பு வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் நாளை பள்ளி- கல்லூரிகள்- அரசு அலுவலகங்கள் இயங்கும் என்றும், வேட்பு மனு தாக்கலும் நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனு தாக்கல் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.